Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

22 பிப்., 2012

தன்னந்தனியே... துரத்தும் தனிமைகள் !!!

நான் நடந்த திசைகளின் பாதைகளில்...
துணையில்லாத.... என் தனித்த பயணங்கள்!
கண்ணுக்கெட்டிய தூரம்வரை...  வெறுமை மட்டுமே,
என்னை வரவேற்கத் தயாராய் இருந்தது!!

தோல்விகளை மட்டுமே பரிசாகக் கொடுத்துவிட்டுச் சென்ற...
காலங்கள்கூட,  என் நிலைமையைப் பார்த்து கலங்கியிருக்கும்!
கலங்கிய கண்களுடன் உறங்கிய என் விழிகளுக்கு...
கடினமான அதிகாலைகள்தான் இன்னொரு பொழுதினையும்...
உயிருடன் பார்க்க வாய்ப்பளித்துப் போயின!!

சுட்டெரிக்கும் வெயிலின் தகிப்பு தாங்கொணாது,
என் நிழலில் அமர முயன்று... தோற்றுப்போனேன்!
கொதிக்கும் சூழலில் வெந்துபோனது... என் பிஞ்சு மனமுந்தான்!
என் உடலினை... என் கால்களே சுமந்தாலும்,
மனதின் சுமைகள் காற்தட வழியோரமாய்...
கண் வழி நீரூற்றி... ஆறுதல் சொல்லின!!

பணமும் குணமும்.... வெகுதூரத்தில் உள்ள எதிரிகளாய்த் தெரிய,
உறவுகள் எல்லோரும் என்னருகே.... அன்பாய் இருப்பதுபோல்,
வழியனுப்பிய பயணங்களின் இடைவழியில்...
'அநாதை' என்றொரு சொற்பதம் தாண்டிய வலிகளோடு...
உண்மையான ஒரு அன்புக்காய் மட்டும்..... யாசிக்கின்றேன்!!

இது கவிதை சொல்லும் கவிதையல்ல...!
கற்பனைகளின் கதையுமல்ல...!!
தனிமை எனும் கொடுமைக்குள்...
எல்லைதாண்டிய சிறைவாசம்!!!
ஒவ்வொரு நாளாய் எண்ணிக்கொண்டிருக்கின்றது,

தனிமையின் வரிகள்....     விடுதலைக் கவியெழுத!!!