Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

2 மார்., 2012

நூலறுந்த பட்டங்கள்...!


அடித்த மணியோசையும், தபால்காரரும்.... கொடுத்த சந்தோசம்,
தற்காலிக ஆறுதலாய்... வாசித்து முடிக்கும் வரைக்கும்தான்!
அதன்பின்னர்தான்.... தபால்காரரின் புன்னகைகூட,
உண்மையான புரிதலென்று புரிந்தது!

என் மகனே! அன்றொருநாள் எனக்கென நீயனுப்பிய காசு...
இன்னமும் மிச்சமிருக்கு ராசா...!!!
என் பேரப்பிள்ளைகளுக்கு... என்ன வேணும் சொல்லு ராசா?
வாங்கி அனுப்புறன்... என்னெண்டாலும்!!!

எத்தனை நாளைக்கு நானிருப்பன்... எனக்கே தெரியாது!
ஆனாலுன் அக்கா தங்கச்சி பிள்ளைகள் ... அவங்களின் வாரிசுகள்,
எல்லாமே இங்குதான் சீவிக்குங்கள்... சிந்தியுங்கள்!
"தாய்" எனும் நிலையிலிருந்து ... தாய் மண்ணிலிருந்து...
 என்  இறுதி  வார்த்தைகள்!!!

உன் அப்பா கட்டிய.... எங்கள் வீட்டை வித்துப்போட்டு,
விமானமேறச் சொன்னது.... உனக்கு பாசமாகத் தெரியலாம்!
"முடியாது".... என்று சொன்னதன் பின்னால், பேசாமல் போனியே ராசா!
பாசமென்பதும் காசுக் கணக்குத்தானோ....???

இன்னும் ஒலிக்காத அழைப்போசைகளுக்காக...காத்துக்கிடக்கும்,
ஆசையாய் வாங்கித்தொலைத்த 'கையளவு' பேச்சாளரும்,
வாசல்வந்து மணியடிக்காத தபால்காரரும்.....என் மனவெதும்பல்களில்,
ஊமையாய்... அடங்கிப்போகின்றார்!

சில ஆயிரம் மைல்தூரம் என்பது...
பல்லாயிரம் மாற்றங்களை........ மனித மனதினினுளும்,
ஆழமாய்த்தான் விதைத்து விடுகின்றதோ...???
புலம்பெயர்ந்தபோதே.... உறவுகளும் பெயர்கின்றன போல!

'உறவுகள்' என்பது ... விடைதெரியாத விடுகதையாக,
தொடர்கதையாய் .... தொடரும் நிலையில் ஒருநாள்,
தொப்புள்கொடிகள் அறுந்துபோன... குழந்தைகளும் தாய்மாரும்,
எம் மண்ணிலும்... அநாதைகளாகக் கிடக்கலாம்!

22 பிப்., 2012

தன்னந்தனியே... துரத்தும் தனிமைகள் !!!

நான் நடந்த திசைகளின் பாதைகளில்...
துணையில்லாத.... என் தனித்த பயணங்கள்!
கண்ணுக்கெட்டிய தூரம்வரை...  வெறுமை மட்டுமே,
என்னை வரவேற்கத் தயாராய் இருந்தது!!

தோல்விகளை மட்டுமே பரிசாகக் கொடுத்துவிட்டுச் சென்ற...
காலங்கள்கூட,  என் நிலைமையைப் பார்த்து கலங்கியிருக்கும்!
கலங்கிய கண்களுடன் உறங்கிய என் விழிகளுக்கு...
கடினமான அதிகாலைகள்தான் இன்னொரு பொழுதினையும்...
உயிருடன் பார்க்க வாய்ப்பளித்துப் போயின!!

சுட்டெரிக்கும் வெயிலின் தகிப்பு தாங்கொணாது,
என் நிழலில் அமர முயன்று... தோற்றுப்போனேன்!
கொதிக்கும் சூழலில் வெந்துபோனது... என் பிஞ்சு மனமுந்தான்!
என் உடலினை... என் கால்களே சுமந்தாலும்,
மனதின் சுமைகள் காற்தட வழியோரமாய்...
கண் வழி நீரூற்றி... ஆறுதல் சொல்லின!!

பணமும் குணமும்.... வெகுதூரத்தில் உள்ள எதிரிகளாய்த் தெரிய,
உறவுகள் எல்லோரும் என்னருகே.... அன்பாய் இருப்பதுபோல்,
வழியனுப்பிய பயணங்களின் இடைவழியில்...
'அநாதை' என்றொரு சொற்பதம் தாண்டிய வலிகளோடு...
உண்மையான ஒரு அன்புக்காய் மட்டும்..... யாசிக்கின்றேன்!!

இது கவிதை சொல்லும் கவிதையல்ல...!
கற்பனைகளின் கதையுமல்ல...!!
தனிமை எனும் கொடுமைக்குள்...
எல்லைதாண்டிய சிறைவாசம்!!!
ஒவ்வொரு நாளாய் எண்ணிக்கொண்டிருக்கின்றது,

தனிமையின் வரிகள்....     விடுதலைக் கவியெழுத!!!

10 நவ., 2011

நிலவைத் தேடி...

என் ஊரில் முற்றத்து நிலவு என்னைத் தேடித் தவிக்க,
ஊரைவிட்டு வந்த நான்... நிலவைத்தேடி,
கண்கூசும் மின் விளக்குகளோடு அலைகின்றேன்...
முகவரியில்லாத தேசமொன்றில்!!!

அம்மாவின் நிலாச்சோறும், மண்வாசனையும்...
அடிக்கடி அனுப்பும்... அன்பான அழைப்பிதழ்களையும்,
என் சூழ்நிலைக் காவலர்கள்... என் மன குப்பைக் குழியில்,
அப்போதே போட்டுப் புதைக்க... இருட்டு மட்டுமே துணையாக!!

இன்னும் நிலவைத் தேடியபடி.... நான்,
முகவரி தெரியாத பயணத்தில்... பசியோடு!

12 அக்., 2011

ஒரு கவிதை அழுகின்றது...!!!



பெருந்தெருவில் விழுந்த பச்சைப் புழுவாக நான்!
காய்ந்து வரண்ட எனக்குள் என் பச்சை இதயம்...
படபடத்து பரிதவிக்கும் பரிதாபம்!
என்னை நான் ஒருமுறை நினைத்துப் பார்க்கின்றேன்...!
இன்னும் உயிரோடு இருப்பதே எனக்கு ஆச்சரியந்தான்!!!

நான் புரளும் மண்ணின் வெட்பம் என்
மெல்லிய மேனியைச் சுட்டு அவிக்கின்றது!
அவிந்து போகையிலும்... உன்
நினைவுகளில் பசுமையாய் ஈரமாகின்றேன்...!
உப்புக் கரிக்கும் கண் வழி நீரில்...!!!

கரைந்து போகும் உன் காதல் கரைகளில்...
பெருகிவரும் கடலாய் என் காதல் !
உன் கரை தொடுகின்ற ஒவ்வொரு அலையும்,
விலகிப்போகும்போது உணரும் பிரிவு வலிகள்....
மீண்டும் மீண்டும் தொட்டுத் தொடர்கின்றன!!!

பரந்து விரிந்த வானமாய் என் மனசும்,
திறந்தே கிடக்கின்றது வெறுமையாய்!
உன்னை மட்டுமே உட்கொள்ள
தயாரான என்  மன வெளிகளில்...
கருமுகில்களாய் கருமை போர்க்கும் "சில"!!!!

சுட்டெரிக்கும் சுவாலைகள் குளிர்மைதான்!
உன் வார்த்தைகளை விட...!!
எரிந்து சாம்பலாகும் வரைக்கும்...
வலிக்கும் வலியைவிட கொடிது என,
உணர்கின்றேன்! அழிந்து.... அழுகின்றேன்!!!

பிராணவாயு தீர்ந்துபோன வளிமண்டலத்தில்,
திணறும்போது கூட.... உன் பெயரை உச்சரித்தபடியே,
இவன் செத்துப் போனான் என்ற செய்தி....
உன் காதில் விழுந்தால்தான்,
உன் மனம் மகிழுமென்றால்....

இந்தப் புழுவாய் இப்போதே செத்துப்போகின்றேன்....!!!
சுமைதாங்கி ஊர்திகளின் சுமைகளின் அடியில்,
என் உடல் சிதறி... பச்சை ரத்தம் பீறிட்ட பிறகு,
என் சின்ன இதயத்தில் இருந்த சுமைகளும்
சிதறிப் போகுமென்றால்............................. :(

11 அக்., 2011

தேவதைகளின் முதலிரவு...!!!


தேடிப் பார்த்தது கிடைக்கவில்லை!
பேசி முடித்ததில் திருப்தியில்லை!
"கண்டவன்" என பெற்றவர் சொன்னதை,
"வந்தவன்" கொண்டதாய் இல்லை!
வாழ்ந்து கொண்டவரை... தொல்லை!!!

வாழும் காலம் முழுதும்,
அவன் வாழ்வதைப் பார்த்து...
கண்களைக் கசக்கியபடியே...
கசக்கிய விழிகளிலும்,
"அவன்" என்பவனே வந்து நிற்கின்றான்!!!

என்னவென்று சொல்லியழ முடியாமலும்,
"ஓ"வென்று கதறியழ இயலாமலும்,
இதயத்தின் நான்கறைகளுக்குள்ளும்...
நசுங்கிப் போகின்றது - தேவதைகள்
கசக்கி எறிந்த காதல்கள்!!!

அதைப் பொறுக்கியெடுத்து...
பொக்கிஷமாய் பாதுகாக்கும்,
தேவைகளின் தேவர்களுக்கு...
தேவதைகளின் அழுகுரல்கள்,
என்றைக்கும் கேட்பதில்லை!!!
 
தேவதைகளின் இரவுகள்...
முதல் இரவிலிருந்தே தொடர் கதைதான்...!
அவர்களின் அழுகுரல்களை...
குரைக்கும் நாய்களும்... இரவின் இருட்டும்....
யாருக்கும் தெரியாமல் அடக்கி விடுகின்றன!!!

மனம் மாறிய தேவதைகளின்,
வாழ்க்கைகளும் மனங்கோணிப் போன...
கதைகள் பல இருந்தும்...
மனம் மாறத் துடிக்கும் தேவதைகளுக்கு...........
இக்கவிதை சமர்ப்பணம்!!!