Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

23 ஆக., 2013

இன்றுதான் பேசக்கிடைத்தது உன் தோழியிடம்...!


இன்றுதான் பேசக்கிடைத்தது உன் தோழியிடம்...
அன்று நீ என்னிடத்தில் எதிர்பார்த்த எதுவுமே,
இன்று உன்னிடத்தில் இல்லையாம்!
கேள்விப்பட்டேன்.....!


உனக்காக அழவே கூடாது என்றிருந்தேன்...
கண்கள் என்னை கைவிட்டன - உன்னைப்போல!
எப்போதும் திரும்பப்பெறமுடியாத
என்னுடைய  நம்பிக்கைகளை
உன்னிடத்தில் தொலைத்தவன் நான்!
இனிமேலும் அதை நான்
உன்னிடத்தில் தேட மாட்டேன்!!!

இப்போது எல்லாமே இருக்கிறது என்னிடத்தில்...
உன் வற்றாத நினைவுகளும்
ஆற்றமுடியாத காயங்களும்
ஆறாத கோபமும் கூட.
உன்னையும் நீ செய்த துரோகத்தையும்
எப்படி மறக்கமுடியும்???
என்னை மட்டுமா...
என் தூய்மையான நேசத்தையும் கேவலப்படுத்தி...
நீ தந்துவிட்டுப்போன பிரிவையும்
அதன் சமுதாய அடையாளத்தையும்
எப்படி மறைக்கமுடியும்???


அன்று  கண்ணீரில் நான் கலங்கிநிற்க,
காரணமில்லாத காரணங்களுக்காய்...
தூக்கியெறிந்து விட்டுப் போனாய்!
நீயின்று கலங்கையிலே....
உன்னைப்போல் என்னால்

உதறிவிட்டுப் போக முடியவில்லை.
இப்பொழுதும் என்னை நீ அழவைக்கிறாய்...
உன்னை நினைத்தல்ல,
உன் நிலையை நினைத்து!
பழிவாங்கும் எண்ணத்தில்...
உன் கண்ணீரை ரசிக்க இயலவில்லை!
நீ சிதைத்துவிட்டுப்போன மனசின்
ஆறாக் காயங்களில்
இன்னும் கொஞ்சம் ஈரம் மீதமிருக்கு...!
உன்னைப்போல் மனச்சாட்சியை
இன்னும் நான் தொலைக்கவில்லை!


காதலால் மட்டும்தான்
துரோகங்களையும் மன்னிக்க முடிகிறது !?
ஏனென்றால்...
காதலுக்கு நேசிக்க மட்டுந்தான் தெரியும்
!

********* ********* ********* ********** ********* ********* 
17-08-2013

                                          இக்கவிதையின்   இசைவடிவம் :
                                          ___________________________________


கால தேவதையும் நானும்...



முப்பது வருஷங்களாய்த் தெரியும் அவளை,
ஒரு வினாடிகூட எனைவிட்டுப் பிரியாதவள்!
எங்கெல்லாமோ எனை இழுத்துச் சென்றவள்...
இப்பொழுதும், ஒரு கேள்விக்குறியின்மேல்
என்னை உட்கார வைத்திருக்கின்றாள்!?

என் வாழ்க்கையைச் சுற்றவிட்டு  முடிச்சவிழ்ப்பதில்..
அவளுக்குக் கொள்ளைப் பிரியம்!

அவளுக்கென்ன...
அவளது சுவாரஸ்யத்துக்காக
சுவாசிப்பது நானல்லவா?
சுமைகளைச் சுமப்பதும் நானல்லவா?

அவளுக்கெங்கே தெரியப்போகிறது...
அவளோடு கூடவே வாழ்வதின் கஷ்டம்!


நான் சிறுகுழந்தையாய் இருந்தபோதில்...
இனிமையாகத்தானே இருந்தாள்!
எப்படி மாறினாள் என்று...
எனக்கே தெரியவில்லை!?


இன்றல்லாது... என்றாவது ஒருநாள்,
இவளது தொல்லை இல்லாமற் போகும்!
அப்பொழுது என் சுவாசமும்
அவள் கூடவே செல்லும்....  பழகிய பாவத்திற்காக!

எதுவுமே நடக்கவில்லை...!?


எங்கேயோ கேட்கிறது
அந்த முனகற் சந்தம்!
காரிருள் கவ்விய பொழுதில்...
ஈருடல் தழுவிய நிலையாய்...
யாருமறியாமல் நடக்கிறது கதகளி!
 

கையில் அகப்பட்டதையெல்லாம்
அள்ளியெடுக்கிறான் திருடன்!
மெய்யில் வசப்பட்டதையெல்லாம்
அள்ளிக்கொடுக்கிறாள் திருடி!
கன்னக்கோல் கன்னம் வைக்க
எண்ணம்போல் கன்னம் சொக்க,
கொஞ்சங் கொஞ்சமாய் திருடுபோகிறது!
கொஞ்சிக் கொஞ்சி உதடு நோகிறது!
 

பின்னிப் பிணைந்த அரவங்கள் போல்
எண்ணித் துணியும் அவயவங்களுக்குள்,
சிக்கித் தவிக்கிறது ஒளிபடா இடங்கள்!
தறிகெட்டுப்போன மனதுக்கும்
வெறி முற்றிப்போன உடலுக்கும்
விடை கொடுக்கின்றன துகிலங்கள்!

பாலாடை நீக்கி பால்பருக...
பசியோடு காத்திருந்த பாலகன்போல்
மேலாடை விலக்கி அடம்பிடித்து,
கீழ்நோக்கி நகர்கின்றான் பாதகன்!



வண்ணத்துப் பூச்சிகள் வட்டமிட
நட்சத்திரப் பூக்களில் உட்கார்ந்து
தேன்குடிக்கிறது வண்டு!
உஷ்ணக் காற்றில்...
மூச்சிரைத்து மின்னுகின்றது,
மூக்குத்தி நட்சத்திரம்!

பிரிந்து நிற்கும் காற்கொலுசுகளின் நடுவே
விரிந்து கிடக்கும் புல்வெளியை
சத்தமின்றி நனைக்கின்றன...
மழைச்சாரல் துளிகள்!
தொடர்ந்து பெய்த மழையில்...
நிரம்பி வழிகின்றன இடை வெளிகள்!


சத்தமாய்த் தொடங்கி...
சந்தமாய் நகர்ந்து...
மொத்தமும் அடங்க,
வெளிச்சத்தை நோக்கி நகர்கின்றன..
துகிலணிந்த உருவங்கள்!


எதுவுமே நடக்கவில்லையென,
வெளிச்சத்தின் மேல் சத்தியம் செய்கிறது...
காரிருள்!!!

கெஞ்சிக் கேட்கிறேன்... கொன்றுவிடு !


என் சிறகுகளை முறித்தெறிந்துவிட்டு,
ஏன் சிரித்துக்கொண்டிருக்கிறாய்?
அப்படியே உன் பாதங்களால்
நசித்துக் கொன்றுவிடு!

என் வலிகளை ரசிப்பாய் என
அப்பொழுதே தெரிந்திருந்தால்,
பூக்களை வெறுக்கும்
வண்ணத்து பூச்சியாய் வாழ்ந்திருப்பேன்!


வண்ணத்தில் மயங்கி...
வாசத்தில் கிறங்கி...
வலிகளை வாங்கிய
கஷ்டம் எனக்கிருந்திருக்காது.
காலங்கடந்த ஞானம்
எனக்குள் -இப்போது!


என் மெளன மொழிகளில்
கெஞ்சிக் கேட்கிறேன்,
அப்படியே உன் பாதங்களால்
நசித்துக் கொன்றுவிடு! -இல்லையேல்,
என் முறிந்த சிறகுகள் கூட,
உன்னைக் காயப்படுத்தலாம்!!! 

பேஸ்புக்கில் நேற்று...!


பால்ய நண்பனை பேஸ்புக்கில் பார்த்தேன் - நேற்று
தெருவில் பார்த்த பள்ளிச் சிறுவனின்
புத்தகப் பையைப் போலவே கனக்கிறது மனசு!
பாடப் புத்தகங்களின் பக்கங்களைவிட
எமக்கான நினைவுப் பக்கங்கள் அதிகம்!
அவனது முகத்தைப் போலவே
எல்லாமே மாறிவிட்டது!
மாற்றங்கள் அவனுக்குள் மட்டுமல்ல,
எனக்குள்ளுந்தான்!


 

இப்போதைய "ஹாய்" "ஹலோ" பண்வழக்க வார்த்தைகளைவிட,
கண்டபடி வாயில் வரும் அப்போதைய கெட்ட வார்த்தைகளில்...
நட்பின் உரிமையும் அன்பும் நிறைந்திருந்தது!


 

நெருங்கிய  நட்புக்களை பிரிவுகள் மட்டும் பிரிப்பதில்லை!
காலங்களும் சேர்ந்தே பிரித்துவிடுகின்றன!!
மீண்டும் இணைக்கும் முகப்புத்தகம்...
பழைய நண்பர்களை "புதிதாய்" இணைத்துக்கொண்டே இருக்கிறது!
 

இது புதிதா...? அல்லது புதிரா...?
விடைதெரியாத வினாக்கள்
எனை விரட்டிக்கொண்டே வருகின்றது!
நான் காலத்தோடு சேர்ந்து ஓடிக்கொண்டிருக்கின்றேன்!

Tc... Bye. Cu Later. :)