Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

16 மார்., 2015

உனக்காக...

                                  



சுடும் மழைக் காலம்...  குளிர் வெயிலாய் நீ வந்தாய் !
இலையுதிர்கால.... வெளிர்ப் பூவை நீ தந்தாய் !!
மனதிழை ஓடும்.... மெல்லிசையாய் உன் பெயரை,
இதழிடை  பாடும்.... இன்னிசையாய்  நீ அமைந்தாய் !!!


கனதரம் நினைத்திடும்... கணங்களும் இனித்திடும்...!
நிரந்தர வதிவிடம்...  மனங்களும் கொடுத்திடும்...!!
சிலதரம் பார்த்திடும்...    நால்-விழிகளும்  கலந்திடும்...!
வெண்ணிலா வெட்கத்தில்... மெல்லமாய்ச் சிவந்திடும்...!!


எங்கே நீ சென்றாலும்... 
என் நினைவும் பின்னால் அலையுமடி..!
அங்கே  வானவில் வீடு கட்டி...  

உனக்காய் வாசல் வரையுமடி... !!

உந்தன் குரலைக் கேட்டு... மெல்லப் பூக்கள்  பூக்காதா... ?
பூமொட்டு விரியும்  தாளம் எந்தன்..... காதில் கேக்காதா... ??
என் கைகள் தொட்டுச் செல்லும் மேகம்....  கொஞ்சம் நிக்காதா..?
உன் புன்னகை சொட்டும் தேநீர்க் கிண்ணம்.... எனக்காய் இனிக்காதா...??


எனக்கே எனக்கென எனக்காக...  உனையே தந்தாய் எனக்காக!
உயிரென உணர்வென உனக்காக.... என் காதலை தந்தேன் உனக்காக!!
வருவாய் தருவாய் வரமாக   .... உனதாய் எனதாய்... எமதாக !
உனக்கே உனக்கென  உனக்காக...  எனையே தருவேன் எமக்காக...!!

**********              **********             **********            **********           **********

                                                      © ஒருவன்








21 டிச., 2014

கள்ளி...!




பெண்ணே.. பெண்ணே...   காதல் கொண்டேன்
உந்தன் கண்ணில் மின்னல்  கண்டேன்
உன்னால்தானே  தூக்கம் மறந்தேன்
விண் மேகம்போல நானும் மிதந்தேன்


செல்லமாய்ச் சிரிக்கிற தேவதையே...!
வெல்லமாய் இனிக்கிறாய்  மனசுக்குள்ளே...!!  

கனவில் கன்னங் கிள்ளிப் போறவளே...!
என் நினைவை அள்ளிக்கொண்டு போறாய் புள்ள...!! 



வெண்நிலவாய் நெருங்கி வருவாயா...?
காதல் சொல்லித் தருவாயா?
இல்லை... வேண்டாம் என்று மறைவாயா?
என் இதயம் திருடித் தொலைவாயா? 
 


கண்ணே.. கண்ணே... என்னோடு சேர்ந்துவிடு !
என் காதல்.... நீ என்று... சொல்லிவிடு !
நீ அன்றி நான் வாழும்    என் வாழ்வில்
அர்த்தங்கள்  இல்லை என்று... புரிந்துவிடு !

வாழ்வில் வண்ணக் கோலம் நீ போட...
இதயம்  சின்னச் சின்னத் தாளமிட...
என் பக்கம் ஓடி நீ வாடி...
உன் மடியில் நான் சாய...!


போகாதே பெண்ணிலவே தூரத் தூர...
என் மீது காதல் சாரல் தூறத் தூற...
நீ வேண்டும் என்னருகில் நெஞ்சம் ஆற...
நம் காதல் என்றென்றும் சேர்ந்து வாழ...
உன்னோடு நான் சேர்ந்து வாழும் காலம்
அதுதானே என்  வாழ்வின் வண்ணக்கோலம்


குறிப்பு:

"கள்ளி" இசை அல்பத்துக்காக எழுதிய பாடல் வரிகளிலிருந்து கவிதை வடிவமாக மாற்றப்பட்டிருக்கிறது.

26 அக்., 2014

ஒரு இராட்சசியின் இரவுகள்...!


உன் இருளுக்குள் என்னை இழுத்தெடுக்கிறாய்...!
மூச்சு முட்டும்வரை...

என்னை இழுத்தணைக்கிறது உன் வெறி...!!
உன் பசிக்காக... என்னைப் பிய்த்துத் தின்னுகிறாய்!
என்னை வெறியேற்றி...
உன் வெறியை தீர்த்துக்கொள்ள  முனைகிறாய்!!!


அந்த ஆரவாரத்துக்குள்ளே....
என் அவலக்குரலும் அடங்கிப்போய்விடுகிறது!
சத்தமின்றித் தொடங்கி... பேரொலியோடு ஆர்ப்பரித்து,
சத்தமின்றியே அடங்கிப்போகும் சத்தங்கள்....
அப்படியே காணாமல் போய்விடுகின்றன...!!!
அது மயக்கமா....? அல்லது மரணமா....??
புரியவில்லை... புரிந்துகொள்ள அனுமதியுமில்லை!!!


எச்சங்கள் மிச்சங்களை  கொஞ்சங் கொஞ்சமாய்...
சத்தமின்றி அழித்துவிட்டு,
மீண்டுமொரு இரவுக்காய் அலையும்...
இராக்கால ராட்சசியே!
உன் சிற்றின்பத்துக்காய்,
என் குருதி குடிப்பதை...
எப்பொழுது நிறுத்தப் போகிறாய் ???
இந்த இரவு உனக்கானதாய் இருக்கலாம்!?
ஆனால்,
நாளைய விடியல் எனக்காக  மட்டுமே!!


விடியும்போது....
இருளின் கனவுச்சுவர்களும் இடிந்துபோகும் !
உன் இராட்சச  வெறியும் கூட !!

*********     *********     **********      **********       **********

25 ஜூலை, 2014

திருவிழாவில் தொலைந்தவன்...



திருவிழாக்கு வந்த  ஒரு தேவதைதான் அவளா...?
தாவணிக்குள் புகுந்துகொண்ட  செந் தாமரை மலரா...?
கால்முளைத்து நடந்துவரும்    மின்னும் தங்கத் தேரா...?
என்  இளமை வெல்லத் திட்டமிடும்   மன்மதனின்  போரா...?


படையெடுக்கும் அவளழகால்...  என்னை வெல்லுவாள் !

உடையுடுத்த  முழுநிலவே...  மண் வந்த சேதி சொல்லுவாள் !!
சிறுகுழந்தைப் புன்னகையால்...  என் மனதை அள்ளுவாள் !
தன் கன்னக் குழிக்குள் செல்லமாக.... என்னைத் தள்ளுவாள் !!


அவள் வதனம் பார்த்து நாணி...  பூக்களும் தலையைக் கவிழ்க்கும் !
தென்றல் கூட கயிறு திரித்து...  அவளைக் கட்டி இழுக்கும் !!
முன்றல் நிறைந்த கண்களெல்லாம்...  அவள் பக்கம் குத்தி நிலைக்கும் !
மன்றம் வந்து ஆடும் அழகாய்...  அவள் கூந்தல் காற்றில் மிதக்கும் !!


நீலவானக் காகிதம் எடுத்து... வண்ண வானவில் பேனா தொடுத்து...
வெண்மையின் அத்தனை நிறங்களும் இணைந்து,
இவள் பெண்மையின் அழகினை வரையும் !
அவள் மென்மை அறிந்து வெட்கப்பட்டு ....வெண்மேகங்கள் ஓடி மறையும்!


சுற்றி வரும் சாமியை மறந்து....  அவளின் பின்னால் சுற்றியவன்,
"கண்ணைக்குத்தும் சாமி"  என்று.... நண்பன் சொன்னபோதும் முறைத்தவன்,
கூட்டத்தில் எட்டியெட்டி அவளைத் தேடி... தன்னையே தொலைத்தவன்,
இன்று..... கடந்தகால நினைவுகளில்    தன்னைத்தானே தேடுகிறான் !!!

***********    ***********    ***********    ***********    ***********   ***********


குறிப்பு :  

ஊர்க்கோயில்  திருவிழாக்களில் பதின்ம வயதுக் கனவுகளோடு...  உள்ளூர்த் தேவதைகளை தரிசித்துத் திரிந்த...பழைய இனிய நினைவுகளின் மீட்டல்களை எடுத்து.... என்  'கால வேலி' களின் கதிகால்களை  கவிதைவரிகளாய் நட்டுவைத்திருக்கின்றேன் .... ! அவ்வளவுதான் ...!!  :)
உங்களின் 'கால வேலி'க்குள்  புகுந்து என் 'கற்பனை ஆடு ' மேய்ந்திருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல...! ;) lol

 -   ஒருவன் ~ கவிதை   -

2 மே, 2014

ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்...!


உலகின் அத்தனை தட்டுக்களிலும்
சம்மணம்போட்டு உட்கார்ந்திருந்த
அத்தனை கிண்ணங்களும்

பலவித எண்ணங்களால்
நிரம்பி வழிந்துகொண்டிருந்தன!
வாழ்வெனும் விருந்துக்கு
அங்கிருந்த அனைவரும்
கட்டாய விருந்தாளிகள்!

பித்துப் பிடித்து தேடியலையும்
சுயநல விரல்களுக்கு...
அப்படியொரு வெறி!
போட்டிபோட்டு முண்டியடித்து...
ஏந்திக்கொள்கின்றன கிண்ணங்களை!
சில வாய்கள் சிரித்தபடியே
செங்குருதியை பருகிக்கொண்டிருக்கின்றன!


வேண்டாமென ஒதுங்கிப்போகும்...
ஒவ்வொரு நொடியிலும்,
எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும்,
மானிட விரல்களுக்குள்...
திணிக்கப்படுகின்றன கிண்ணங்கள்!


எந்தக் கிண்ணம்...? எப்பொழுது...?எவர் கரங்களில்...?
என்பதெல்லாம்....... எவருக்கும் தெரிவதில்லை!
அவசியமுமில்லை...!!
எதை ஏந்துகிறோமோ...
அதை பருகியே ஆக வேண்டுமாம்!
விதிகள் வகுக்கப்படாத மானிட வெளிகளில்...
விதிகள் எல்லாம்...
நடுவீதி நாய்க்குட்டியாகிவிடுகிறது!
மிதிபட்டால் விதி - இதுவே
வாழ்வியல் நியதி....சதியும் கூட!


வெற்றி தோல்வி... இன்பம் துன்பம்,
அழுகை சிரிப்பு... நட்பு பகை,
பசி... தூக்கம்... கோபம்... காமம்,
வன்மம்...துரோகம்...பிறப்பு... இறப்பு.... என
அவை தரும் போதை
இன்னும் எத்தனையோ!!!

எத்தனை விதமான உணர்வுகளை...
கிண்ணங்களை நிரப்பியவை தருகிறது!?
அதைத்தான் போதை என்பதா? அல்லது
மனதின் பேதை என்பதா?


இந்தக் கிண்ணங்களை வெல்லும்
ஒரு கிண்ணம் ஏந்த வேண்டும்..!
மானிடத்தின்... மனிதநேயத்தின்...
வெற்றியைக் கொண்டாடும்...
மாற்றத்தை உண்டாக்கும்...
ஒரு கிண்ணத்தை ஏந்தியே ஆகவேண்டும்..!!


எம் எண்ணங்களையும் வண்ணங்களையும் மறந்து
அதற்காகவே நீயும் நானும் போராடவேண்டியிருக்கிறது...!
இந்த உலகவிதிகளைத் தாண்டிப் பாயவேண்டியிருக்கிறது...!!


வெற்றிவிழா விருந்தில் பல
மானிட முகங்கள் தெரிகிறது!
விரல்களில் உட்கார்ந்த
அனைத்துக் கிண்ணங்களிலும்
மனிதநேயம் நிரம்பி வழிகிறது!
கனவிலும்... காதைப் பிளக்கிறது கரகோசம்...!


அதிகாலை விடிந்து... எழும்புகையில்,
அருகில் சூடாறியபடியே
காத்துக் கிடக்கிறது....
எனக்கான தேநீர்க் கிண்ணம்!!!

 

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%