Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

26 அக்., 2014

ஒரு இராட்சசியின் இரவுகள்...!


உன் இருளுக்குள் என்னை இழுத்தெடுக்கிறாய்...!
மூச்சு முட்டும்வரை...

என்னை இழுத்தணைக்கிறது உன் வெறி...!!
உன் பசிக்காக... என்னைப் பிய்த்துத் தின்னுகிறாய்!
என்னை வெறியேற்றி...
உன் வெறியை தீர்த்துக்கொள்ள  முனைகிறாய்!!!


அந்த ஆரவாரத்துக்குள்ளே....
என் அவலக்குரலும் அடங்கிப்போய்விடுகிறது!
சத்தமின்றித் தொடங்கி... பேரொலியோடு ஆர்ப்பரித்து,
சத்தமின்றியே அடங்கிப்போகும் சத்தங்கள்....
அப்படியே காணாமல் போய்விடுகின்றன...!!!
அது மயக்கமா....? அல்லது மரணமா....??
புரியவில்லை... புரிந்துகொள்ள அனுமதியுமில்லை!!!


எச்சங்கள் மிச்சங்களை  கொஞ்சங் கொஞ்சமாய்...
சத்தமின்றி அழித்துவிட்டு,
மீண்டுமொரு இரவுக்காய் அலையும்...
இராக்கால ராட்சசியே!
உன் சிற்றின்பத்துக்காய்,
என் குருதி குடிப்பதை...
எப்பொழுது நிறுத்தப் போகிறாய் ???
இந்த இரவு உனக்கானதாய் இருக்கலாம்!?
ஆனால்,
நாளைய விடியல் எனக்காக  மட்டுமே!!


விடியும்போது....
இருளின் கனவுச்சுவர்களும் இடிந்துபோகும் !
உன் இராட்சச  வெறியும் கூட !!

*********     *********     **********      **********       **********

25 ஜூலை, 2014

திருவிழாவில் தொலைந்தவன்...



திருவிழாக்கு வந்த  ஒரு தேவதைதான் அவளா...?
தாவணிக்குள் புகுந்துகொண்ட  செந் தாமரை மலரா...?
கால்முளைத்து நடந்துவரும்    மின்னும் தங்கத் தேரா...?
என்  இளமை வெல்லத் திட்டமிடும்   மன்மதனின்  போரா...?


படையெடுக்கும் அவளழகால்...  என்னை வெல்லுவாள் !

உடையுடுத்த  முழுநிலவே...  மண் வந்த சேதி சொல்லுவாள் !!
சிறுகுழந்தைப் புன்னகையால்...  என் மனதை அள்ளுவாள் !
தன் கன்னக் குழிக்குள் செல்லமாக.... என்னைத் தள்ளுவாள் !!


அவள் வதனம் பார்த்து நாணி...  பூக்களும் தலையைக் கவிழ்க்கும் !
தென்றல் கூட கயிறு திரித்து...  அவளைக் கட்டி இழுக்கும் !!
முன்றல் நிறைந்த கண்களெல்லாம்...  அவள் பக்கம் குத்தி நிலைக்கும் !
மன்றம் வந்து ஆடும் அழகாய்...  அவள் கூந்தல் காற்றில் மிதக்கும் !!


நீலவானக் காகிதம் எடுத்து... வண்ண வானவில் பேனா தொடுத்து...
வெண்மையின் அத்தனை நிறங்களும் இணைந்து,
இவள் பெண்மையின் அழகினை வரையும் !
அவள் மென்மை அறிந்து வெட்கப்பட்டு ....வெண்மேகங்கள் ஓடி மறையும்!


சுற்றி வரும் சாமியை மறந்து....  அவளின் பின்னால் சுற்றியவன்,
"கண்ணைக்குத்தும் சாமி"  என்று.... நண்பன் சொன்னபோதும் முறைத்தவன்,
கூட்டத்தில் எட்டியெட்டி அவளைத் தேடி... தன்னையே தொலைத்தவன்,
இன்று..... கடந்தகால நினைவுகளில்    தன்னைத்தானே தேடுகிறான் !!!

***********    ***********    ***********    ***********    ***********   ***********


குறிப்பு :  

ஊர்க்கோயில்  திருவிழாக்களில் பதின்ம வயதுக் கனவுகளோடு...  உள்ளூர்த் தேவதைகளை தரிசித்துத் திரிந்த...பழைய இனிய நினைவுகளின் மீட்டல்களை எடுத்து.... என்  'கால வேலி' களின் கதிகால்களை  கவிதைவரிகளாய் நட்டுவைத்திருக்கின்றேன் .... ! அவ்வளவுதான் ...!!  :)
உங்களின் 'கால வேலி'க்குள்  புகுந்து என் 'கற்பனை ஆடு ' மேய்ந்திருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல...! ;) lol

 -   ஒருவன் ~ கவிதை   -

2 மே, 2014

ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்...!


உலகின் அத்தனை தட்டுக்களிலும்
சம்மணம்போட்டு உட்கார்ந்திருந்த
அத்தனை கிண்ணங்களும்

பலவித எண்ணங்களால்
நிரம்பி வழிந்துகொண்டிருந்தன!
வாழ்வெனும் விருந்துக்கு
அங்கிருந்த அனைவரும்
கட்டாய விருந்தாளிகள்!

பித்துப் பிடித்து தேடியலையும்
சுயநல விரல்களுக்கு...
அப்படியொரு வெறி!
போட்டிபோட்டு முண்டியடித்து...
ஏந்திக்கொள்கின்றன கிண்ணங்களை!
சில வாய்கள் சிரித்தபடியே
செங்குருதியை பருகிக்கொண்டிருக்கின்றன!


வேண்டாமென ஒதுங்கிப்போகும்...
ஒவ்வொரு நொடியிலும்,
எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும்,
மானிட விரல்களுக்குள்...
திணிக்கப்படுகின்றன கிண்ணங்கள்!


எந்தக் கிண்ணம்...? எப்பொழுது...?எவர் கரங்களில்...?
என்பதெல்லாம்....... எவருக்கும் தெரிவதில்லை!
அவசியமுமில்லை...!!
எதை ஏந்துகிறோமோ...
அதை பருகியே ஆக வேண்டுமாம்!
விதிகள் வகுக்கப்படாத மானிட வெளிகளில்...
விதிகள் எல்லாம்...
நடுவீதி நாய்க்குட்டியாகிவிடுகிறது!
மிதிபட்டால் விதி - இதுவே
வாழ்வியல் நியதி....சதியும் கூட!


வெற்றி தோல்வி... இன்பம் துன்பம்,
அழுகை சிரிப்பு... நட்பு பகை,
பசி... தூக்கம்... கோபம்... காமம்,
வன்மம்...துரோகம்...பிறப்பு... இறப்பு.... என
அவை தரும் போதை
இன்னும் எத்தனையோ!!!

எத்தனை விதமான உணர்வுகளை...
கிண்ணங்களை நிரப்பியவை தருகிறது!?
அதைத்தான் போதை என்பதா? அல்லது
மனதின் பேதை என்பதா?


இந்தக் கிண்ணங்களை வெல்லும்
ஒரு கிண்ணம் ஏந்த வேண்டும்..!
மானிடத்தின்... மனிதநேயத்தின்...
வெற்றியைக் கொண்டாடும்...
மாற்றத்தை உண்டாக்கும்...
ஒரு கிண்ணத்தை ஏந்தியே ஆகவேண்டும்..!!


எம் எண்ணங்களையும் வண்ணங்களையும் மறந்து
அதற்காகவே நீயும் நானும் போராடவேண்டியிருக்கிறது...!
இந்த உலகவிதிகளைத் தாண்டிப் பாயவேண்டியிருக்கிறது...!!


வெற்றிவிழா விருந்தில் பல
மானிட முகங்கள் தெரிகிறது!
விரல்களில் உட்கார்ந்த
அனைத்துக் கிண்ணங்களிலும்
மனிதநேயம் நிரம்பி வழிகிறது!
கனவிலும்... காதைப் பிளக்கிறது கரகோசம்...!


அதிகாலை விடிந்து... எழும்புகையில்,
அருகில் சூடாறியபடியே
காத்துக் கிடக்கிறது....
எனக்கான தேநீர்க் கிண்ணம்!!!

 

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

29 ஏப்., 2014

காதலின் பெயரால்...



நம்பிக்கைகள் கைகோர்த்து நடக்க
எண்ணங்கள் இணையாக பிறக்க
பல வண்ணங்கள் இழையோடிச் சிறக்க
இரு உள்ளங்கள் உறவாடிப் பழகும்
இனிமையான காலத்தின் பெயர்தான் 'காதல்'


அப்படியான  இனிதான பொழுதுகளை
முன்னொரு நாளில்....
நீயும் நானும் பகிர்ந்திருந்தோம்!


காதலையும் அன்பையும்
அள்ளிக்கொடுத்த நீயேதான்,
பின்னொரு நாளில்....
பிரிவையும் வலியையும்
வாரியிறைத்துவிட்டுப் போனாய்!
நீ தந்துவிட்டுப்போன
அந்த வலிகளைத் தாண்டி வெளியேவர...
நான் பல  ஜென்மங்கள்
எடுக்க வேண்டியிருந்தது!


இன்னும் என் இரவுகள்...
என் தூக்கத்தை திருப்பித்தரவில்லை!
இன்னும் உன் ஞாபகங்கள்...
எனைத் தீயால் தீண்டுவதை நிறுத்தவில்லை!


வலிகள் ஒருவனை வலிமையாக்கும்!
எப்படியான துன்பத்தையும்...
புன்னகையோடு வரவேற்கும் வல்லமையை,
உன் துரோகம் தந்துவிட்டுப் போயிருக்கிறது!
இப்பொழுதெல்லாம் நான்...
கண்ணீரை வீணாக்குவதில்லை!!


கடந்து வந்த பாதைகள்...
எப்பொழுதும் நினைவில் இருக்கு!
நடந்து முடிந்த நாடகங்கள்...
இப்பொழுதும் மனதில் இருக்கு!


துரோகங்கள் மறக்கப்பட்டுவிடுமென
அதைச் செய்தவர்கள் நினைக்கலாம்!?
ஆனால்...ஏனோ தெரியவில்லை,
துரோகங்களை மட்டும்
இலகுவில் மறக்கமுடிவதில்லை..!
மன்னிக்கவும் முடிவதில்லை!!
'மன்னித்து விடலாம்' எனச் சொல்லும்
அதே மனதுதான்.... மறக்கவும் மறுக்கிறது!


ஒரு சாதாரண மனிதனின் வாழ்வை...
சதா   ரணமாக்கி இருக்கிறாய்!
உயிரோடு வாழும்...
பிணமாக்கி இருக்கிறாய்!
உன் துரோகங்களுக்குத் தண்டனையை
நான் கொடுக்கப்போவதில்லை
அதை உன் மனச்சாட்சியே பார்த்துக்கொள்ளட்டும்!


ஆனால்....
எனக்கென்று ஒருநாள் வரும்
உனைக் காண!
நிச்சயமாக.... அந்தநாள்,
உனக்கானதாக இருக்காது!


********   ********   ********   ********   ********

14 ஏப்., 2014

எண்ணிரெண்டு வயதில்...




பதின்மங்களின் படிமக்கனவுகள்;
புதினங்களாய்  பேசிக்கொள்ளும்
இரகசிய  வார்த்தைகள்;
இளசுகளின் சுத்தல்களில்
பெருசுகளுக்குப் புரியாத
தலைமுறை வளர்ச்சியின்
வழக்கமான அதே காதல்!

எப்போதும் புத்தம் புதிதாய்
மின்னும் எண்ணங்களுடன்
தோன்றும் மின்னல்கள்!
மின்சாரம் இல்லாத ஊரில்
மனசுக்குள் விளக்கெரியும்!
இரு ஜோடி இதழின் அழுத்தத்தில்
பலகோடி 'வோல்ற் ' மின்னழுத்தம் பிறக்கும்!


முதல் முத்தம் எப்பொழுதும்
தலைக்கேற்றும் பித்தம்!
முதன்முதற் காதல்....
காலத்தால் அழியாத
இதயத்தின் மோதல்!
சூரிய உதயங்கள் வரை
வண்ணக் கனவுகள் ஆக்கிரமித்த
வாலிப பருவத்தின்
வலிந்த போர்க்காலங்கள் !


கருவேப்பிலை மரத்தைக்கூட
பெருவிருப்போடு பார்த்து ரசிக்க வைத்து
நெருப்பாக தேகம் கொதிக்க வைத்து
பார்வையாலே பேசிக்கொண்டு
மனப் போர்வைக்குள்ளே ஒளித்தபடி
ஊரறியாமல் உலகறியாமல்
உற்றவர் யாருமறியாமல்...
சந்திக்கும் அரிதான பொழுதொன்றில்,
பத்து விரல் பற்றுகையில்...
பக்கென்று பற்றிக்கொள்ளும்
பதினாறு  வயசல்லவா அது!

   

எண்ணிரெண்டு வயதில்...
கண்ணிரெண்டில் கலக்கம்!
கன்னியவள் மனதில்...
துளிர்க்குது மயக்கம்!
காதலின் கிறக்கம்...
இன்னுமேன் தயக்கம்!


முதல் காதல்;
முதல் முத்தம்;
இன்னும் பல...!!!


பெரும்பாலும் ,
அந்த வயது அனுபவங்கள்
அனைவருக்கும் பொதுவானவை!
மீண்டும்,
மீட்டிப்பார்க்கும் நினைவுகள்
எப்பொழுதும் இனிதானவை!


:wub: :wub: :wub: :wub: :wub: :wub: :wub: :wub: :wub: