Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

21 ஜன., 2016

ஊடல் - கூடல்


 


காற்றில் குமிழி ஊதும் சிறு குழந்தைபோல...
உன் காதிலும் பல கதைகள் சொல்கிறேன்!
நீற்றில் நிலவும் நிலாமுகில் புகையாய்,
என் வாழ்விலும்  நீதான் உலா வருகிறாய்!


வா வா எனும்போதும்.... தள்ளிப்போகிறாய்...!
போவெனச் சொல்லா....
வார்த்தைகளையும் அள்ளித் தருகிறாய்!!

ஏனடி இப்படி அலைக்கழிகிறாய்...???
 
களைத்துப்போய்....
உன் கழுத்துக்குள்தானே சாயப்போகிறேன்!
அப்பொழுதுமட்டுமேன்.... 

அப்படி அணைத்துக்கொள்கிறாய்???

நீ நிலா... நான் வானமா...? - இல்லை,
நீயில்லா வானத்தில்...
நிலாதான் உலாவுமா???


© ஒருவன்

24 ஆக., 2015

நீயும் நானும்...




உனைத் தொடவே...
எனக்குள்ளே கரைந்து போனவள் நீ...!

எனைத் தேடாதே...
உனக்குள்ளே தொலைந்து போனவன் நான்...!!


© ஒருவன்

தேவதைகள் இப்படித்தான்...!



சிறகினை உதிர்த்துவிட்டும்...
வானில் பறந்திட முடியுமென்று,

நீதானே சொல்லித் தந்தாய்...
!


மரபினை உடைத்து விட்டு...
புதுக் கவிதைகள் பிறக்குமென்று,
உன்னழகாலே மெல்லச் சொன்னாய்...!
!

உறவினை பிரிந்த பின்னும்...
நினைவுகள் விரியுமென்று,
சொற்தீயால் சுட்டுச் சென்றாய்...!!!


கனவினை கலைத்திட்டும்...
உணர்வுகள் திரியுமென்ற,
காதற் தூக்கத்தில் என்னைக் கொன்றாய்...!!!!


© ஒருவன்

16 மார்., 2015

உனக்காக...

                                  



சுடும் மழைக் காலம்...  குளிர் வெயிலாய் நீ வந்தாய் !
இலையுதிர்கால.... வெளிர்ப் பூவை நீ தந்தாய் !!
மனதிழை ஓடும்.... மெல்லிசையாய் உன் பெயரை,
இதழிடை  பாடும்.... இன்னிசையாய்  நீ அமைந்தாய் !!!


கனதரம் நினைத்திடும்... கணங்களும் இனித்திடும்...!
நிரந்தர வதிவிடம்...  மனங்களும் கொடுத்திடும்...!!
சிலதரம் பார்த்திடும்...    நால்-விழிகளும்  கலந்திடும்...!
வெண்ணிலா வெட்கத்தில்... மெல்லமாய்ச் சிவந்திடும்...!!


எங்கே நீ சென்றாலும்... 
என் நினைவும் பின்னால் அலையுமடி..!
அங்கே  வானவில் வீடு கட்டி...  

உனக்காய் வாசல் வரையுமடி... !!

உந்தன் குரலைக் கேட்டு... மெல்லப் பூக்கள்  பூக்காதா... ?
பூமொட்டு விரியும்  தாளம் எந்தன்..... காதில் கேக்காதா... ??
என் கைகள் தொட்டுச் செல்லும் மேகம்....  கொஞ்சம் நிக்காதா..?
உன் புன்னகை சொட்டும் தேநீர்க் கிண்ணம்.... எனக்காய் இனிக்காதா...??


எனக்கே எனக்கென எனக்காக...  உனையே தந்தாய் எனக்காக!
உயிரென உணர்வென உனக்காக.... என் காதலை தந்தேன் உனக்காக!!
வருவாய் தருவாய் வரமாக   .... உனதாய் எனதாய்... எமதாக !
உனக்கே உனக்கென  உனக்காக...  எனையே தருவேன் எமக்காக...!!

**********              **********             **********            **********           **********

                                                      © ஒருவன்








21 டிச., 2014

கள்ளி...!




பெண்ணே.. பெண்ணே...   காதல் கொண்டேன்
உந்தன் கண்ணில் மின்னல்  கண்டேன்
உன்னால்தானே  தூக்கம் மறந்தேன்
விண் மேகம்போல நானும் மிதந்தேன்


செல்லமாய்ச் சிரிக்கிற தேவதையே...!
வெல்லமாய் இனிக்கிறாய்  மனசுக்குள்ளே...!!  

கனவில் கன்னங் கிள்ளிப் போறவளே...!
என் நினைவை அள்ளிக்கொண்டு போறாய் புள்ள...!! 



வெண்நிலவாய் நெருங்கி வருவாயா...?
காதல் சொல்லித் தருவாயா?
இல்லை... வேண்டாம் என்று மறைவாயா?
என் இதயம் திருடித் தொலைவாயா? 
 


கண்ணே.. கண்ணே... என்னோடு சேர்ந்துவிடு !
என் காதல்.... நீ என்று... சொல்லிவிடு !
நீ அன்றி நான் வாழும்    என் வாழ்வில்
அர்த்தங்கள்  இல்லை என்று... புரிந்துவிடு !

வாழ்வில் வண்ணக் கோலம் நீ போட...
இதயம்  சின்னச் சின்னத் தாளமிட...
என் பக்கம் ஓடி நீ வாடி...
உன் மடியில் நான் சாய...!


போகாதே பெண்ணிலவே தூரத் தூர...
என் மீது காதல் சாரல் தூறத் தூற...
நீ வேண்டும் என்னருகில் நெஞ்சம் ஆற...
நம் காதல் என்றென்றும் சேர்ந்து வாழ...
உன்னோடு நான் சேர்ந்து வாழும் காலம்
அதுதானே என்  வாழ்வின் வண்ணக்கோலம்


குறிப்பு:

"கள்ளி" இசை அல்பத்துக்காக எழுதிய பாடல் வரிகளிலிருந்து கவிதை வடிவமாக மாற்றப்பட்டிருக்கிறது.

26 அக்., 2014

ஒரு இராட்சசியின் இரவுகள்...!


உன் இருளுக்குள் என்னை இழுத்தெடுக்கிறாய்...!
மூச்சு முட்டும்வரை...

என்னை இழுத்தணைக்கிறது உன் வெறி...!!
உன் பசிக்காக... என்னைப் பிய்த்துத் தின்னுகிறாய்!
என்னை வெறியேற்றி...
உன் வெறியை தீர்த்துக்கொள்ள  முனைகிறாய்!!!


அந்த ஆரவாரத்துக்குள்ளே....
என் அவலக்குரலும் அடங்கிப்போய்விடுகிறது!
சத்தமின்றித் தொடங்கி... பேரொலியோடு ஆர்ப்பரித்து,
சத்தமின்றியே அடங்கிப்போகும் சத்தங்கள்....
அப்படியே காணாமல் போய்விடுகின்றன...!!!
அது மயக்கமா....? அல்லது மரணமா....??
புரியவில்லை... புரிந்துகொள்ள அனுமதியுமில்லை!!!


எச்சங்கள் மிச்சங்களை  கொஞ்சங் கொஞ்சமாய்...
சத்தமின்றி அழித்துவிட்டு,
மீண்டுமொரு இரவுக்காய் அலையும்...
இராக்கால ராட்சசியே!
உன் சிற்றின்பத்துக்காய்,
என் குருதி குடிப்பதை...
எப்பொழுது நிறுத்தப் போகிறாய் ???
இந்த இரவு உனக்கானதாய் இருக்கலாம்!?
ஆனால்,
நாளைய விடியல் எனக்காக  மட்டுமே!!


விடியும்போது....
இருளின் கனவுச்சுவர்களும் இடிந்துபோகும் !
உன் இராட்சச  வெறியும் கூட !!

*********     *********     **********      **********       **********

25 ஜூலை, 2014

திருவிழாவில் தொலைந்தவன்...



திருவிழாக்கு வந்த  ஒரு தேவதைதான் அவளா...?
தாவணிக்குள் புகுந்துகொண்ட  செந் தாமரை மலரா...?
கால்முளைத்து நடந்துவரும்    மின்னும் தங்கத் தேரா...?
என்  இளமை வெல்லத் திட்டமிடும்   மன்மதனின்  போரா...?


படையெடுக்கும் அவளழகால்...  என்னை வெல்லுவாள் !

உடையுடுத்த  முழுநிலவே...  மண் வந்த சேதி சொல்லுவாள் !!
சிறுகுழந்தைப் புன்னகையால்...  என் மனதை அள்ளுவாள் !
தன் கன்னக் குழிக்குள் செல்லமாக.... என்னைத் தள்ளுவாள் !!


அவள் வதனம் பார்த்து நாணி...  பூக்களும் தலையைக் கவிழ்க்கும் !
தென்றல் கூட கயிறு திரித்து...  அவளைக் கட்டி இழுக்கும் !!
முன்றல் நிறைந்த கண்களெல்லாம்...  அவள் பக்கம் குத்தி நிலைக்கும் !
மன்றம் வந்து ஆடும் அழகாய்...  அவள் கூந்தல் காற்றில் மிதக்கும் !!


நீலவானக் காகிதம் எடுத்து... வண்ண வானவில் பேனா தொடுத்து...
வெண்மையின் அத்தனை நிறங்களும் இணைந்து,
இவள் பெண்மையின் அழகினை வரையும் !
அவள் மென்மை அறிந்து வெட்கப்பட்டு ....வெண்மேகங்கள் ஓடி மறையும்!


சுற்றி வரும் சாமியை மறந்து....  அவளின் பின்னால் சுற்றியவன்,
"கண்ணைக்குத்தும் சாமி"  என்று.... நண்பன் சொன்னபோதும் முறைத்தவன்,
கூட்டத்தில் எட்டியெட்டி அவளைத் தேடி... தன்னையே தொலைத்தவன்,
இன்று..... கடந்தகால நினைவுகளில்    தன்னைத்தானே தேடுகிறான் !!!

***********    ***********    ***********    ***********    ***********   ***********


குறிப்பு :  

ஊர்க்கோயில்  திருவிழாக்களில் பதின்ம வயதுக் கனவுகளோடு...  உள்ளூர்த் தேவதைகளை தரிசித்துத் திரிந்த...பழைய இனிய நினைவுகளின் மீட்டல்களை எடுத்து.... என்  'கால வேலி' களின் கதிகால்களை  கவிதைவரிகளாய் நட்டுவைத்திருக்கின்றேன் .... ! அவ்வளவுதான் ...!!  :)
உங்களின் 'கால வேலி'க்குள்  புகுந்து என் 'கற்பனை ஆடு ' மேய்ந்திருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல...! ;) lol

 -   ஒருவன் ~ கவிதை   -

2 மே, 2014

ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்...!


உலகின் அத்தனை தட்டுக்களிலும்
சம்மணம்போட்டு உட்கார்ந்திருந்த
அத்தனை கிண்ணங்களும்

பலவித எண்ணங்களால்
நிரம்பி வழிந்துகொண்டிருந்தன!
வாழ்வெனும் விருந்துக்கு
அங்கிருந்த அனைவரும்
கட்டாய விருந்தாளிகள்!

பித்துப் பிடித்து தேடியலையும்
சுயநல விரல்களுக்கு...
அப்படியொரு வெறி!
போட்டிபோட்டு முண்டியடித்து...
ஏந்திக்கொள்கின்றன கிண்ணங்களை!
சில வாய்கள் சிரித்தபடியே
செங்குருதியை பருகிக்கொண்டிருக்கின்றன!


வேண்டாமென ஒதுங்கிப்போகும்...
ஒவ்வொரு நொடியிலும்,
எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும்,
மானிட விரல்களுக்குள்...
திணிக்கப்படுகின்றன கிண்ணங்கள்!


எந்தக் கிண்ணம்...? எப்பொழுது...?எவர் கரங்களில்...?
என்பதெல்லாம்....... எவருக்கும் தெரிவதில்லை!
அவசியமுமில்லை...!!
எதை ஏந்துகிறோமோ...
அதை பருகியே ஆக வேண்டுமாம்!
விதிகள் வகுக்கப்படாத மானிட வெளிகளில்...
விதிகள் எல்லாம்...
நடுவீதி நாய்க்குட்டியாகிவிடுகிறது!
மிதிபட்டால் விதி - இதுவே
வாழ்வியல் நியதி....சதியும் கூட!


வெற்றி தோல்வி... இன்பம் துன்பம்,
அழுகை சிரிப்பு... நட்பு பகை,
பசி... தூக்கம்... கோபம்... காமம்,
வன்மம்...துரோகம்...பிறப்பு... இறப்பு.... என
அவை தரும் போதை
இன்னும் எத்தனையோ!!!

எத்தனை விதமான உணர்வுகளை...
கிண்ணங்களை நிரப்பியவை தருகிறது!?
அதைத்தான் போதை என்பதா? அல்லது
மனதின் பேதை என்பதா?


இந்தக் கிண்ணங்களை வெல்லும்
ஒரு கிண்ணம் ஏந்த வேண்டும்..!
மானிடத்தின்... மனிதநேயத்தின்...
வெற்றியைக் கொண்டாடும்...
மாற்றத்தை உண்டாக்கும்...
ஒரு கிண்ணத்தை ஏந்தியே ஆகவேண்டும்..!!


எம் எண்ணங்களையும் வண்ணங்களையும் மறந்து
அதற்காகவே நீயும் நானும் போராடவேண்டியிருக்கிறது...!
இந்த உலகவிதிகளைத் தாண்டிப் பாயவேண்டியிருக்கிறது...!!


வெற்றிவிழா விருந்தில் பல
மானிட முகங்கள் தெரிகிறது!
விரல்களில் உட்கார்ந்த
அனைத்துக் கிண்ணங்களிலும்
மனிதநேயம் நிரம்பி வழிகிறது!
கனவிலும்... காதைப் பிளக்கிறது கரகோசம்...!


அதிகாலை விடிந்து... எழும்புகையில்,
அருகில் சூடாறியபடியே
காத்துக் கிடக்கிறது....
எனக்கான தேநீர்க் கிண்ணம்!!!

 

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

29 ஏப்., 2014

காதலின் பெயரால்...



நம்பிக்கைகள் கைகோர்த்து நடக்க
எண்ணங்கள் இணையாக பிறக்க
பல வண்ணங்கள் இழையோடிச் சிறக்க
இரு உள்ளங்கள் உறவாடிப் பழகும்
இனிமையான காலத்தின் பெயர்தான் 'காதல்'


அப்படியான  இனிதான பொழுதுகளை
முன்னொரு நாளில்....
நீயும் நானும் பகிர்ந்திருந்தோம்!


காதலையும் அன்பையும்
அள்ளிக்கொடுத்த நீயேதான்,
பின்னொரு நாளில்....
பிரிவையும் வலியையும்
வாரியிறைத்துவிட்டுப் போனாய்!
நீ தந்துவிட்டுப்போன
அந்த வலிகளைத் தாண்டி வெளியேவர...
நான் பல  ஜென்மங்கள்
எடுக்க வேண்டியிருந்தது!


இன்னும் என் இரவுகள்...
என் தூக்கத்தை திருப்பித்தரவில்லை!
இன்னும் உன் ஞாபகங்கள்...
எனைத் தீயால் தீண்டுவதை நிறுத்தவில்லை!


வலிகள் ஒருவனை வலிமையாக்கும்!
எப்படியான துன்பத்தையும்...
புன்னகையோடு வரவேற்கும் வல்லமையை,
உன் துரோகம் தந்துவிட்டுப் போயிருக்கிறது!
இப்பொழுதெல்லாம் நான்...
கண்ணீரை வீணாக்குவதில்லை!!


கடந்து வந்த பாதைகள்...
எப்பொழுதும் நினைவில் இருக்கு!
நடந்து முடிந்த நாடகங்கள்...
இப்பொழுதும் மனதில் இருக்கு!


துரோகங்கள் மறக்கப்பட்டுவிடுமென
அதைச் செய்தவர்கள் நினைக்கலாம்!?
ஆனால்...ஏனோ தெரியவில்லை,
துரோகங்களை மட்டும்
இலகுவில் மறக்கமுடிவதில்லை..!
மன்னிக்கவும் முடிவதில்லை!!
'மன்னித்து விடலாம்' எனச் சொல்லும்
அதே மனதுதான்.... மறக்கவும் மறுக்கிறது!


ஒரு சாதாரண மனிதனின் வாழ்வை...
சதா   ரணமாக்கி இருக்கிறாய்!
உயிரோடு வாழும்...
பிணமாக்கி இருக்கிறாய்!
உன் துரோகங்களுக்குத் தண்டனையை
நான் கொடுக்கப்போவதில்லை
அதை உன் மனச்சாட்சியே பார்த்துக்கொள்ளட்டும்!


ஆனால்....
எனக்கென்று ஒருநாள் வரும்
உனைக் காண!
நிச்சயமாக.... அந்தநாள்,
உனக்கானதாக இருக்காது!


********   ********   ********   ********   ********

14 ஏப்., 2014

எண்ணிரெண்டு வயதில்...




பதின்மங்களின் படிமக்கனவுகள்;
புதினங்களாய்  பேசிக்கொள்ளும்
இரகசிய  வார்த்தைகள்;
இளசுகளின் சுத்தல்களில்
பெருசுகளுக்குப் புரியாத
தலைமுறை வளர்ச்சியின்
வழக்கமான அதே காதல்!

எப்போதும் புத்தம் புதிதாய்
மின்னும் எண்ணங்களுடன்
தோன்றும் மின்னல்கள்!
மின்சாரம் இல்லாத ஊரில்
மனசுக்குள் விளக்கெரியும்!
இரு ஜோடி இதழின் அழுத்தத்தில்
பலகோடி 'வோல்ற் ' மின்னழுத்தம் பிறக்கும்!


முதல் முத்தம் எப்பொழுதும்
தலைக்கேற்றும் பித்தம்!
முதன்முதற் காதல்....
காலத்தால் அழியாத
இதயத்தின் மோதல்!
சூரிய உதயங்கள் வரை
வண்ணக் கனவுகள் ஆக்கிரமித்த
வாலிப பருவத்தின்
வலிந்த போர்க்காலங்கள் !


கருவேப்பிலை மரத்தைக்கூட
பெருவிருப்போடு பார்த்து ரசிக்க வைத்து
நெருப்பாக தேகம் கொதிக்க வைத்து
பார்வையாலே பேசிக்கொண்டு
மனப் போர்வைக்குள்ளே ஒளித்தபடி
ஊரறியாமல் உலகறியாமல்
உற்றவர் யாருமறியாமல்...
சந்திக்கும் அரிதான பொழுதொன்றில்,
பத்து விரல் பற்றுகையில்...
பக்கென்று பற்றிக்கொள்ளும்
பதினாறு  வயசல்லவா அது!

   

எண்ணிரெண்டு வயதில்...
கண்ணிரெண்டில் கலக்கம்!
கன்னியவள் மனதில்...
துளிர்க்குது மயக்கம்!
காதலின் கிறக்கம்...
இன்னுமேன் தயக்கம்!


முதல் காதல்;
முதல் முத்தம்;
இன்னும் பல...!!!


பெரும்பாலும் ,
அந்த வயது அனுபவங்கள்
அனைவருக்கும் பொதுவானவை!
மீண்டும்,
மீட்டிப்பார்க்கும் நினைவுகள்
எப்பொழுதும் இனிதானவை!


:wub: :wub: :wub: :wub: :wub: :wub: :wub: :wub: :wub:

விடுமுறை விதிமுறைகள் !


(: திருமணமானவர்களுக்கு மட்டும் :) 

 %%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

குறுக்குக் கட்டி  நீ குளிக்கையிலே...
குறுக்கு மறுக்காய் அலையுதடி மனசு!
குறும்புக்காரன் மனசுக்குள்ளே...
குறுகுறுக்குதடி வயசு!


தலைக்கு சீயாக்காய்  தேய்ச்சு
சிகைக்கு சாம்பிராணி காட்டி
நீ குளிச்சு முடிந்தபின்னும்,
எனக்கு முடியவில்லை!
என் இதயம் படியவில்லை!!


புது உடையுடுத்தி வந்த பின்னும்
என் படையெடுப்பு அடங்கவில்லை!
மடையுடைத்த எண்ணத்தில்...
தடையுடைக்கும் திட்டத்தில்
என் கவனமெல்லாம் உன்னிடத்தில்
உன் கவளம் போன்ற கன்னத்தில்!


சமயலறைக் கட்டில் நீ சமைக்கையிலே,
சமைந்தவள் உனைப் பார்க்கையிலே...
என் சிந்தனையும்   சமையுதடி!
எண்ணெய்  ஊற்றாதே...!
என் எண்ணமெல்லாம் வழுக்குதடி!!

சாமி சிலை  முன்னாடி
சாந்தமாய்த்தான் தெரிகிறாய்!
திரைச்சீலை பின்னாடி
காந்தமாய் ஏன்  இழுக்கிறாய்!?


ஒரு நாளில் எத்தனை தடவையெனை
தவணைமுறையில் சாகடிப்பாய்?
விடுமுறை நாளில்கூட
விட்டுக்கொடுக்க மாட்டாயா?!
பிடிவாதக்காரி நீ....
பிடிகொடுக்க மாட்டாயா?!


கொஞ்சம் விட்டுக்கொடுடி கொஞ்ச(ம்)
இப்பவே வேண்டும் எனக்கு மஞ்சம்
விடுமுறை நாளென்றால்
துயிலறைக்கில்லை அது!
படிமுறை விதிமுறை எல்லாம்
இல்லறக் காதலுக்கு இல்லவேயில்லை அது!


எல்லை மீறி வாறன்!
உன்னையே தாயேன்...!!
விதி மீறத்தான் போறன்!
கதி நீயென்றே ஆவேன்...!!


வேண்டாமென்று சொன்னாலும்...
சும்மா நான் விடமாட்டேன்!
'சீ போடா' என்று செல்லமாய்...
நீ திட்டினாலும் விடமாட்டேன்!!


கட்டியவளை கட்டிலிலே
கட்டிக்கொண்ட பின் தொட்டிலிலே....
எட்டிப்பிடிக்கும் பிஞ்சு விரல்கள்
சுட்டிக்காட்டுது  நெஞ்சி (இ)ன் காதலதை!


%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

கல்யாணம் 2 காதல்


கொஞ்சங் கொஞ்சமாய்க் கொள்ளை அடிக்கிறாள்!
என் மனசுக்குள்ளே வெள்ளை அடிக்கிறாள்!
வண்ணங்களை அள்ளித் தெளிக்கிறாள்!
 
என் எண்ணங்களைக் கிள்ளி எடுக்கிறாள்!

மீண்டுமொரு புயல் வருதா?
உயிரோடு சாகடிக்க!
இன்னுமொரு முறை வருதா?
காதலித்துப் பேதலிக்க!


நல்ல மாட்டுக்கு ஒரு சூடு - அதுபோல
நொந்த மனசுக்கு ஒரு காதல்!
தோல்விகள் தருவது... வலிகளை மட்டுமல்ல,
நல்ல அனுபவங்களையும்தான்!!


காதலித்துத்தான் கட்டுறாங்கள்...!
பிறகேன்... சத்தம் போட்டு கத்துறாங்கள்?!
காதலித்தபோது இருந்ததெல்லாம்,
கல்யாணத்தோடு காணாமல் போச்சா?!

அவளைத் 'தேவதை' என்றவன்- இப்போது
'அவளே தேவையில்லை' என்கிறான்!
இவளே என் வாழ்வென்றவன் - இனி
வாழ வழியில்லையென பிரிகின்றான்!


காதல் எங்கே போச்சுது?
அதுக்கு என்ன ஆச்சுது?
காதல் தானே சாய்ச்சுது?
இப்ப என்ன பேச்சிது?


தாலிக்கயிறு ஏற்றும் வரை...
காதல் தூக்கில் தொங்க மாட்டேன்!
கல்யாணம் கட்டும் வரை...
அதை எட்டிக்கூட பார்க்கமாட்டேன்!


தாலி கட்டிக் காதலிப்போம்!
தாயைப்போல நேசிப்போம்!
காதலைத்தான் யாசிப்போம்!
இல் வாழ்வுதனைப் பூசிப்போம்!


திருமணத்தால் இணைந்து
இருமனதால் கலந்து...
ஒரு மனதாக,
கல்யாணத்தின் பின் காதல்,
கல்லறை வரைக்கும்....
தொடரும் வாழ்தல்!


மீண்டுமொரு முறை அவள் பெயரை
அனுமதியின்றி உச்சரிக்கின்றேன்!
ஏய் தேவதையே....!
நிறைய காதலிக்க வேண்டும் காத்திரு...!!
நம் கல்யாணம் முடியட்டும்...!!!

 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குறிப்பு :

'திருமணத்தில் முடிவது' என்பதுதான் 'காதலின் வெற்றி' எனக் கருதுவது மிகத்தவறானது. பல காதல்கள் கல்யாணத்தின்பின் காணாமல் போய்விடுகின்றன.
 'காதல்' என்பது வாழ்வின் இறுதிவரை வரவேண்டியது. திருமணத்தின் பின்னர் இன்னொரு பரிமாணத்தை அடையும் காதலையும்... காதலோடு காதலிக்கத் தெரிந்தவர்கள்தான்............
காதலிலும் ஜெயிக்கின்றார்கள்...! வாழ்க்கையிலும் ஜெயிக்கின்றார்கள்...!!

'விவாகரத்து' எனும் 'Divorce'

tblfpnnews_3103274107.jpg

ஆணைப் படைத்தான்...!
பெண்ணையும் படைத்தான்...!!
இயற்கையை படைத்து...
அவர்களை இயங்கவும் வைத்தான் !!
அந்த வித்தைகாரன்  பெயர்தான்  - கடவுள் !!!

ஆணுக்கு பெயர் வைத்தான்,
அது   'கணவன்' !
பெண்ணுக்கு பெயரிட்டான்,
அது   'மனைவி' !
இருவரையும்....
சேர்த்து வைக்க திட்டமிட்டான்
அது  'திருமணம்'  !!


அத்தோடு விட்டானா....?!!
'காமம்' என்றும்...
'காதல்' என்றும்...
எதிரும் புதிருமாய்,
எதையெதையோ வைத்தான் ...
அதன்  இடையில்!!!

'ஆசை அறுபதுநாள்
மோகம் முப்பதுநாள்'

அப்படியொரு பழமொழியை...
எவன் வைத்தான்... தெரியவில்லை!?
தொண்ணூறு நாளின் பின்தான்,
பெரும்பாலும்...
தொல்லைகள் ஆரம்பிக்கும்..!!!

எல்லையில்லா அன்பென்றார்...!?
தொல்லையில்லாமல் பிரிவோம் என்பார்...!!
பிரியமாக இருந்தோரெல்லாம்...
பிரிவோமென்றே பிரியப்படுவார்..!!
புரிதல் இல்லை!
பரிவும் இல்லை!
'காதல்' என்றால் என்னவென்று...
போதுமான விளக்கம் இல்லை!


குடும்பமென்றும்... குழந்தையென்றும்...
ஆனபின்னும் ஆணவத்தில்,
ஆளுக்காள் அடம்பிடித்தால்...
ஆகுமினி இப்படித்தான்...!

திருமணங்கள் மட்டும்
அங்கு முறிவதில்லை,
இரு மனங்களுந்தான் எரிகிறது!

கடவுள் சேர்த்து வைக்க...
மனிதன் பிரித்தானா? - இல்லை,
மனிதன் சேர்ந்து வாழ...
கடவுள் பிரித்தாரா? -தெரியவில்லை!

ஆனால்,
ஒன்றுமட்டும் உண்மை...
'விவாகரத்து' என்று ஒன்றை,
மனிதன்தான் கண்டு பிடித்தான் !!!


# 99% ஆன விவாகரத்துக்கள் தவிர்க்கப்படக் கூடியனவாகவே  இருந்திருக்கிறது.... இருக்கிறது. ஆனால், மனிதர்கள் அதனை அமுல்படுத்த விரும்புவதில்லை #  :(

கள்வனின் காதலி




யார் வீட்டுப் பிள்ளை இவள்?
அடி பெருத்து...
இடை சிறுத்து...
வளர்ந்து நிற்பவளின்....
அழகு மேனியில் தெரிகிறது,
பருவ வளர்ச்சியின் படிமங்கள்!


அவளின் பருவக் குலையைப்
பார்க்கப் பார்க்க...
தாகம் எடுக்கிறது தானாக...!
தேகச்சூடு அடங்கும்வரை
பருகவேண்டும்

அவளின் இள நீரை!
வீசுகின்ற காற்றிலே அழகாய்
மெல்ல மெல்ல அசைகிறது
அவள் பச்சைக் கூந்தல்..!
இளங்குருத்தின் வாசம் வந்து
வெட்கத்தோடு அழைக்கிறது
ஏறி வா என்று...!


அவள் இடை அணைத்து...
அவளுடல் மீதேறி...
யாரோ கட்டியதை
திருட்டுத்தனமாய்...
மெல்ல அவிழ்த்திறக்கி
சத்தமின்றி  மொத்தத்தையும்
ரசித்து...குடித்து...வெறித்து....
திகட்டும் போதையில் திளைத்து,
பின் களைத்துப் போக.....
அவள் தோப்பில் அவளோடு,
கொஞ்ச நேரம் தூங்கினாலும்,
அதுவல்லோ   சுகம்...!!!


~~~~~       ~~~~~      ~~~~~      ~~~~~

குறிப்பு :
பல வருடங்களுக்கு முன்னர் நண்பர்களோடு திருட்டுத்தனமாக தென்னந்தோப்புகளில் இளநீரையும், யாரோ கட்டிவிட்ட முட்டியிறக்கி  தென்னங் கள்ளினையும்
குடித்து மகிழ்ந்த பழைய ஞாபகங்களோடு,    கொஞ்சம் காமரசம் கலந்து :wub: ..... கள்வனின் காதலியாக!!! :wub: :lol:

ஒரு தேநீர் விடுதியும் இரு நாற்காலிகளும்...

324, காலி வீதி , வெள்ளவத்தை, கொழும்பு -06 

 

சில வேளைகளில்....
சில இடங்களையும் சில சம்பவங்களையும் கூட
காதல் தொற்றிக்கொள்கிறது!
அதன்  இனிய நினைவுகளால்...
மனம் கொஞ்சம்... தன்னைத்தானே  தேற்றிக்கொள்கிறது!!

காத்திருப்புக்களும் சந்திப்புகளும்
கைகுலுக்கிக்கொள்ளும் அழகான இடம்தான்....
அந்த தேநீர்விடுதி!
வழமையான அந்த மேசையும் நாற்காலிகளும்
அந்த இருவருக்காகவே காத்திருக்கும்...!
காதலர்களை அமரவைத்து அழகுபார்ப்பதில்
அதற்கும் கொள்ளைப் பிரியம்...!!
அங்குள்ள பணியாளரைப்போலவே
இவற்றிற்கும் இவர்கள் நன்கு பரிட்சயம்!!!


அவளுக்காகக் காத்திருந்த
பலதடவைகளில் நான் பார்த்திருக்கிறேன்.....!
அவள் வரும்போது...
வண்ணங்களையும் வாசனையையும் அள்ளிக்கொண்டு வந்திருக்கிறாள்!
திடீரென்று எல்லாமே..... அழகாக மாறும் மாயம்,
அங்கேதான் நடந்திருக்கிறது!!
காற்றிலாடும் அவளது துப்பட்டா....
வண்ணத்துப்பூச்சிகளை பறக்கவிட்டுக்கொண்டே இருக்கும்!
 

சூடாறிய தேநீர் அப்படியே காத்திருக்க...
ஆறுதலாய் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தன
மெளனங்கள்!
அங்கு....
தேநீர் எப்பொழுதும் இனித்ததில்லை!
குடித்துத் தந்த மீதித் தேநீரில்...
நிறையக் காதலும் கலந்திருந்தது..!
இனியவள் அருகில் இருக்க...
இனிப்பாக வேறெதுவும் இருந்ததில்லை...!!


மென்மையை ரசிக்க ஆரம்பித்ததே
அவள் மென்கரங்களில்தான்! -நான்
பெண்மையை ரசிக்க ஆரம்பித்ததும்
அவள்  நாற்குணங்களில்தான்!!
ஒரு தேவதையை அருகில் உட்காரவைத்து
தேநீரையும் அன்பையும் பரிமாறியபடியே
கழிந்த பொழுதுகள் இனிமையானவை!

கடிகாரம் மீது பலதடவை கோபித்துக்கொள்வதும்,
கடுகதி வேகத்தில் சுற்றும்... முட்களைப் பார்த்து முறைத்துக்கொள்வதும்,
ஐந்தைந்து நிமிடங்களால் பிரியாவிடைகளை தள்ளிப்போடுவதும்,
'இன்னும் கொஞ்சநேரம்.....' என கெஞ்சிக்கொள்வதும்,
அப்போதைய அன்றாட அனுபவங்களாய்....
இருவரையும் ஆக்கிரமித்திருந்தன!


பிரிவுகள் மீண்டும் சந்திப்பதற்காய் அமையும்வரை...
அவை தற்காலிகமானவைதான்...!
இனிமையானவையும்கூட..!! - ஆனால்
நிரந்தரமான பிரிவுகள்...
சில இடங்களையும் பல சம்பவங்களையும்
ஒன்றுமில்லாத வெறுமையாக்கி விடுகிறது.

மீண்டும்.... அந்த தேநீர்விடுதியையும்
வெறுமையான அந்த நாற்காலிகளையும்
தனியாக பார்க்கும் திராணியற்ற மனதினை
அதன் இனிய நினைவுகளால்
கொஞ்சம் தேற்றிக் கொள்கிறது மனசு!


காதலைப்போலவே... அதன் நினைவுகளும்
மாயங்கள் செய்யும்!
காயம்பட்ட  மனதிற்கு..... மனமே
மருந்து போட்டுக்கொள்ளும் மாயத்தினை,
காதல்நினைவுகளால் மட்டுமே நிகழ்த்த முடிகிறது...!!!


*****     *****     *****     *****     *****     *****     *****     *****     

hotel-omega-inn.jpg

நீண்ட நாட்களின் பின்னர்  அந்த தேநீர் விடுதியின் படத்தினை தற்செயலாக மீண்டும் பார்க்க நேர்ந்தபொழுதில்....
மனதில் தோன்றிய கிறுக்கல் ( சனிக்கிழமை இராப்பொழுதில் திராட்சை இரசத்தை பருகியபடி~~~ ) :wub: :rolleyes:

 

மீண்டுமொருமுறை வந்துவிடாதே...!!!


ஒரு மார்கழி இருபத்தாறில்தான்,
பேராறுபோல் பெருக்கெடுத்தாய்....
எம்  ஊருக்குள்ளே!
பொறுமையாய் பொறுத்தாழ்ந்த பூமித்தாயை...
நீ கண்ணீரால் நனைத்தது அன்றைக்குத்தான்!

சொல்லாமல் கொள்ளாமல் வந்து,
எங்களையெல்லாம் கொன்று போட்டாய்..!
இத்தனைநாளாய் உன்னில்
அள்ளியெடுத்த செல்வத்தையெல்லாம்,
ஒற்றைநாளில் மொத்தமாய்
நீ அள்ளியெடுத்தாய்..!!
கடல்தாயே... மறந்துவிட்டாயா?


சுனாமியென்றால் எமனின் பினாமியென்று
அன்றைக்குத்தான் தெரியும்!
என்றுமே...இயற்கையைப் போற்றினோம்...!
அன்றுதான்  உன்னைத் தூற்றினோம்...!!


என் பாட்டன் உன்மேல் வலைவீசினான்,
என் அப்பன் உன்னில் தூண்டில் போட்டான்,
எம் பிஞ்சுக்குழந்தை.... உனக்கு என்ன செய்தது?
நீ அலையலையாய் அடிக்க...
நுரைக்குமிழி பிடித்து விளையாடிய  பிஞ்சுகளையும்
அலையோடு அழைத்துச்சென்றதேனோ?


உன்னைத்தானே தெய்வமென்றோம்!  -அதற்கும் மேலே,
உன்னைத்தானே தாயுமென்றோம்!!
எம்  பிஞ்சைக்கூட  
வஞ்சம் தீர்த்தாய்... ஏன் தாயே?!


செத்து  மிதந்தது  யேசுபாலன் சிலைகள் மட்டுமல்ல,
எம் பாலகரும்தான்...!
பாலூட்டிச் சீராட்டி  வளர்த்த பாலரையெல்லாம்
நீராட்டி அழித்தாய்... ஏன் தாயே?!


மீண்டுமொருமுறை வந்துவிடாதே..!
உன் கோரப்பசி தீர்க்க
எம்மிடம் எதுவுமில்லை...!
போரின் பசிக்கு... குடுத்தது போக,
மிஞ்சியிருப்பது... எம் கண்ணீர் மட்டுமே!
அதை வேண்டுமானால்,
உனக்கே  காணிக்கையாக்குகின்றோம்!


மீண்டுமொருமுறை வந்துவிடாதே!
உன் கோரப்பசி தீர்க்க
எம்மிடம் எதுவுமில்லை...!!

__________
26-12-2013
 ~~~~~~  ~~~~~~  ~~~~~~  ~~~~~~  ~~~~~~  ~~~~~~~
     

                                          இக்கவிதையின் இசைவடிவம்: 
                                          ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~



உங்கள் துரோகத்திற்கு நன்றி...!


நாம்... ரொம்பவும் நேசிக்கும் ஒருவரால்தான்,
'துரோகம்' எனும் பரிசையும்...
புன்னகைத்தபடியே... கொடுக்க முடிகிறது!

மனச்சாட்சிகள் எப்பொழுதும்
தொடர்ந்து தூங்கிக்கொண்டிருப்பதில்லை..!
அது... துரோகம் செய்தவரையும்
ஒருநாள் தட்டியெழுப்பும்..!!
காலம் கடந்த ஞானத்தால்...
கோலம் மாற்ற முடியாது!
காலைச் சுற்றிய பாம்பாக...
மனச்சாட்சியின் தொண்டைக்குழியை,
இறுக்கிக்கொண்டேயிருக்கும்...!!


துரோகத்தின் தடங்களில்...
அனுபவப்பாதை விரிந்து செல்லும்...!
தாங்களே பின்னிய வலையில்,
துரோகிகள் சிக்கித் தவிக்க...
மற்றவரின் பயணம் மட்டும் தொடரும்!
மீண்டுமொருமுறை துரோகச் சந்திகளில் தரிக்காத,
தனித்த நீண்ட பயணங்களில்......
மாற்றங்கள் இருக்கும்...!
ஏமாற்றங்கள் இருக்காது...!!

இனிமையான பொழுதொன்றில்....
திரும்பிப் பார்க்கும் போது,
ஏறிவந்த படிக்கட்டுகளாய் துரோகங்கள்,
எங்கோ தொலைவில்... கறுப்பு வெள்ளையாய்!
வலிகளை வழிகளாக்கி...
துரோகங்களையும் அனுபவங்களாக்கி...
வாழ்க்கையினை வண்ணங்களாக்க உதவிய...
துரோகங்களுக்கும்... அதைப் பரிசாகத் தந்தவர்களுக்கும்,
ஒரு நன்றி சொல்லியே ஆகவேண்டும்!!!


துரோகத்திற்கு நன்றிகள்..............!
உங்கள் துரோகத்திற்கு நன்றிகள்.......!!


#############################################

~~~ ஒரு கடற்கரை மணல் மீதான கிறுக்கல்கள் ~~~


கரைமணலைத் தொட்டுத்தொட்டு விளையாட...
நுரையலைகள் விட்டுவிட்டு அலையாட...
திரைகடல் மெட்டுப்போட்டு இனிதான,
திரைப்பாடல் ஒன்றின் முதல்வரியை ஞாபகமூட்டும்!

மெதுவாய் வீசுகின்ற உப்புக்காற்றின் ஈரம்,
பக்கம்வந்து பேசுகின்ற வார்த்தைகள்...
முன்பொருநாளின்  மாலைப்பொழுதில்
அன்போடு மணல் அளைந்த
இருபது விரல்கள் பற்றிய கதை பேசும்!


உப்புக்காற்றில் உலர்ந்துபோன
இருஜோடி இதழ்கள்
காதலின் பருவமழையில்
முழுதாக நனைந்துபோக...
செக்கச் சிவந்த வானம்கூட
அவளின் கன்னம் பார்க்க வெட்கப்பட்டு
மேகத்தை அள்ளிப் போர்த்துக்கொள்ளும்!

மெளனங்கள் பேசிக்கொள்ளும்
ரம்மியமான  மாலைப்பொழுதில்
விரிந்த கடலுக்கும் வானத்துக்கும் இடையே
எதிர்காலக் கனவுகளை
திரையிட்டுப் பார்த்துக்கொள்ளும்.... இரு மனசுகள்!


அவன் தோளில் சாய்ந்தபடிதான்...
அவளுக்குப் பேசப்பிடிக்கும்!
பிறக்கப்போகும் முதற் குழந்தையிலிருந்து,
பேரப்பிள்ளைகள் வரைக்கும்...
நிறையக் கதை பேசுவாள்!
குழந்தைத்தனமாக அவள் சொல்லிக்கொண்டிருந்தால்,
கேட்டுக்கொண்டே இருக்கலாம்...!
அத்தனை இனிமையாயிருக்கும்...!!

எட்டிப்பார்க்கும் நிலாப்பெண்ணை,
ஒட்டிநின்று ஓரக்கண்ணால் ரசித்தபடி...
விட்டுச்செல்ல மனமின்றி,
மெல்ல அகலுவான் பகலவன்!
அவள் விடைபெறும் வேளைகளில்...
அவனும்  அப்படித்தான்...!!


அவனுடைய மாலைப்பொழுதுகளை...
தன்னுடன் இனிமையாக்கிய தேவதை அவள்!
"தேவதைகள் தோன்றி... பின் மறைந்துவிடுவார்கள்"
அப்படித்தான் அவளும் !
திடீரென்று ஒருநாள்,
சொல்லாமல் கொள்ளாமல் மறைந்து போனாள்!

மறைந்து... மறந்து....
இத்தனை வருடங்கள் ஆகியும்
மணல் மீது அழியாமல்
அப்படியே இருக்கின்றன காற்றடங்கள்!
வழக்கமான அந்த இடத்தில்
அத்தனை நினைவுகளும்....
குவிந்து கிடக்கின்றன மணல்மேடாய்!


 

மணல்வீடு கட்டி விளையாடும்
சின்னக் குழந்தைகளை பார்த்தபடி,
தனியாக ஒருவன்........
அக்கடற்கரையின் மணற்பரப்பில்,
ஒரு தேவதையின் பெயரை எழுதிக்கொண்டிருக்கிறான்!
கடலலைகள் ஓயாமல்
அதனை... அழித்துக்கொண்டே இருக்கின்றன...!!!


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குறிப்பு:
இக்கவிதையின் ஒலிவடிவம் "இசைக்கவிதைகள்" பகுதியிலும் இணைக்கப்பட்டுள்ளது

13 ஏப்., 2014

அயல் வீட்டுக் கயல்விழி...


விரிந்து கிடக்கும் பூக்களில்
தேன் குடிக்கும் வண்டினைப்போல்...
திறந்து வைத்த ஜன்னலோரத்தில் நான்!!!
அதிசயம் ஆனால் உண்மை...!
பக்கத்து வீட்டில்தான்
பால்நிலா வசிக்கிறது!!!


நிலவுக்கும் எனக்குமான
சில அடி தூரங்களும்
பலகோடி ஒளியாண்டு
இடைவெளியாய்த் தெரிகிறதே!!!
இத்தனை நாளாய்ப் பார்க்காமல்
எத்தனை அமாவாசைகளை கடந்திருப்பேன்!!!

ஏய் நிலவே...!!!
பறந்து போகும் என் எண்ணங்களுக்கு
சிறகுகளை இலவசமாய்...
நீதான் கொடுத்தாயோ???
மொத்தமாய் மறந்துபோகிறேன்
என்னை நானே..!!!



வீசுகின்ற பருவக் காற்றை
நீதான் அனுப்பி வைத்தாயோ???
மெதுவாய் என் பக்கம் வந்து
உன் பருவத்தின் வாசனையை
பக்குவமாய்ச் சொல்லுதடி!!!



அங்கே நீ எட்டிப் பார்த்துச் சிரிக்கையிலே
இங்கே கூடுவிட்டு நழுவுதடி என் இதயம்!
உன் கன்னக் குழியில் தவறி விழுந்து,
உன் நெஞ்சத்தின் உச்சிவரை...
துள்ளி எழும்புதடி என் ஆசைகள்!!!

என் அயல் வீட்டுக் கயல்விழியே...!
இராமுழுதும் கனாக்களோடு களைத்துவிட்டேன்...!
அதிகாலையிலும் என்னை அலைக்கழிக்காதே...!!

கொஞ்சம் வந்து நில்லடி
உன் ஜன்னலோரம்...!!!
கழுவாத முகத்தோடும் களையாக இருக்கும்
உன் வதனம் பார்க்கையிலே...
பால்நிலவைப் பார்த்து
நிலாச் சோறுண்ணும் குழந்தையாகிறேன்!!!


**********************************************************

முக்கிய குறிப்பு:

பக்கத்து வீட்டில்  ஒரு அழகான பொண்ணு இருந்து.... அந்தப் பொண்ணை 'சைற்' அடித்து  'றூட்டு' விடும் பெரும்பாக்கியம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை.  :lol:  (எனக்கு ஏறத்தாழ 15 வருடங்களுக்கு முன் கிடைத்தது -அது ஒரு கதை) :wub: :lol:

அந்தப் பெரும்பாக்கியம் கிடைத்த பாக்கியவான்களுக்கு இக்கவிதை சமர்ப்பணம்...!!!

தேன் நிலவு ~ காமரசம்


பாற்கடலில் பாவை குளிக்க
அதைப்பார்த்துக் கண்கள் களிக்க
நனைந்த தேகத்தில் அங்கங்கே
மின்னிச்  சிரிக்கின்றன மொட்டுக்கள்!


மெல்ல மெல்லப் பாலாடை விலக
சின்னச் சின்னதாய் சிந்தனை சிதற
முழுதான நிர்வாணத்தின் அழகில்
சொக்கிப்போகிறது மனசு!

பாவையவள் பார்வையாலே
எட்டிப்பார்க்கிறது அந்தரங்கம்!
ஒளிந்து கிடந்த ஒற்றைத் தென்னைகூட
இப்பொழுது ஒளிர்ந்து எழுந்திடுதே!


கொஞ்சங்கொஞ்சமாய் முன்னேறி
தன் அவசரத்தைக் காட்டுகிறாள்!
ஜன்னலைத்  திறந்துவைத்தால்
என்  கட்டில் வரை வருவாள்!


காலையில்,  அவள் கணவன் வரும்வரைக்கும்,
என் இரவு.... இவளோடு கழியும்!
அழகான,    இவள் தேகம் புணர்வதினால்
என்  இதயம்.... இதமாகக் களிக்கும்!


காலடியில் கிடக்கும் ஈரமான புல்வெளியை
காலையில் பார்க்கும்போது...
நேற்றைய இரவை அவளோடு களித்ததும்
நீங்காமல் நினைவில்வரும்!


மீண்டுமவளைப் புணர்வதற்கு...
இன்னுமொரு பெளர்ணமி இரவுக்காய்
காத்துக்கிடக்கின்றன கண்கள்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~